தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது “தளபதி விஜய்யின் அரசியல் வருகை” மற்றும் லியோ திரைப்படத்தில் இடம் பெற்ற “நா ரெடி” பாடலின் சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது தனது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தளபதி 67 என முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், மாஸ்டர் படத்தில் 50% விஜய் படம், 50% லோகேஷ் கனகராஜ் படம் என்று இருந்தது போல் இல்லாமல் இந்த முறை 100% என்னுடைய படமாக இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக விஜயின் லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தன் திரை பயணத்தில் 68 வது படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார். பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்க்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்திருக்கும் தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் நடைபெற்றது. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த இந்த இசை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவோடு நடிகர் சிலம்பரசன்.TR அவர்களும் இணைந்து பாடி ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த விழாவை முடித்து தற்போது சென்னை திரும்பிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, “சமீபத்திய தளபதி விஜயின் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இந்தப் பாடல் இப்படி வந்திருக்கிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டபோது, “அப்படி ஒன்றும் இல்லை சூழ்நிலைக்காக தேவைப்படும் போது அப்படி வைக்கிறார்கள் அவ்வளவு தான்.” என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “தளபதி விஜயின் அரசியல் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்டபோது, “நல்ல ஒரு விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்” என பதில் அளித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.