இடப்பிரச்சனை காரணமாக மாமியார் - மருமகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் அடுத்த மேல உசேன் நகரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடிக்கும், அவரது பக்கத்து வீட்டாருக்கும் இடப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பூங்கொடியும், அவரது மருமகள் தங்க லட்சுமியும் சேர்ந்து அடிக்கடி பக்கத்து வீட்டுடன் சண்டைக்குப் போனதாகத் தெரிகிறது.



இந்நிலையில், இடப் பிரச்சனை விவகாரம் முற்றிய நிலையில், தற்கொலை செய்யும் விதமாக மாமியார்
பூங்கொடி, தன் மீது தீ வைத்துக்கொண்டார். தீ பற்றி எரிந்ததும், அருகில் நின்ற அவரது மருமகள் தங்க லட்சுமி மீது சாய்ந்து, அவர் மீதும் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

இதனையடுத்து, தீ பற்றி எரிந்த நிலையில், மாமியார் அங்கேயே கீழே சரிந்து விழுந்த நிலையில், மருமகள் தீ பற்றி எரிவதோடு, வீட்டிற்குள் ஓடியுள்ளார். அப்போது, அருகில் உள்ளவர்கள், ஓடிச்சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பூங்கொடி முற்றிலும் எரிந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, கடுமையான தீ காயங்களுடன் தங்க லட்சுமி, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாமியார் - மருமகள் தீ குளித்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாமியார் - மருமகள் தீ குளித்த வீடியோ காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.