பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் எதிர் எதிர் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால், அரசியல் ரீதியாக இருவருக்கும் இடையில் சுமூகமான நிலையில்லை.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜனோதா பென், ஜர்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள கல்யானேஸ்வரி கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். அப்போது, கொல்கத்தா விமான நிலையம் வந்தார்.

அப்போது, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக 2 நாள் பயணமாக டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையம் வருகை தந்தார். அங்கே, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொண்டனர்.

இருவரும் புன்னகைத்தபடி பேசிக்கொண்டிருந்த நிலையில், மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் மனைவிக்குப் புடவை ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட யசோதாபென், பரிசு கொடுத்தமைக்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, இருவரும் அவரவர் விமானத்தில் ஏறிச் சென்றனர்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியும், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.