ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் மூன்றாவது முறை இணைந்திருக்கும் நடிகர் விஷால் - இயக்குனர் ஹரி காம்போவில் தயாராகும் #விஷால்34 திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லத்தி. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த லத்தி திரைப்படத்தில் விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் விஷால் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுக்கும் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை நடிகர் விஷால் உருவாக்குகிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்து வெளிவர தயாராகி வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான டைம் டிராவல் கதைக்களத்தை கொண்ட சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் இரட்டை வேடங்களில் மார்க் மற்றும் ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரோடு இணைந்து மிரட்டலான முன்னணி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடிக்க, இயக்குனர் செல்வராகவன், சுனில், ரித்து வர்மா, அபிநயா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக மார்க் ஆண்டனி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக உருவாகும் #விஷால்34 திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைகிறார் விஷால். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரியுடன் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் படப்பூஜை நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் விஷால் 34 திரைப்படத்தை அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

M.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவில், உருவாகும் அதிரடி படமான விஷால் 34 படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். இந்நிலையில் இந்த விஷால் 34 திரைப்படத்திற்கு இயக்குனர் ஹரியின் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…