தனது நடிப்பில் கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிரடியான அறிவிப்பை தற்போது விஷால் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது. அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 34வது படமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே விஷால் - ஹரி கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி & பூஜை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த வெற்றி படமாக ஹட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் விஷால் நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. நடிகர்கள் விஷால் மற்றும் SJசூர்யா இணைந்து மிரட்டலான முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சுவாரசியமான டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் விஷால் மற்றும் SJசூர்யா இருவரும் இந்த டைம் டிராவலில் பலவிதமான காலகட்டங்களில் பல வெவ்வேறு அட்டகாசமான கெட்டப்புகளில் இருக்கும் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தன. வரும் ஜூலை மாத இறுதியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகர் விஷால் பகிர்ந்து கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று (மே 14ஆம் தேதி) மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான எங்கள் பகுதி படப்பிடிப்பை நானும் எனது அன்பு அண்ணன், டார்லிங் சுனில் அவர்களும் நிறைவு செய்தோம். இது ஒரு அற்புதமான அனுபவம், அட்டகாசமான பயணம் நன்றி ஆதிக் ரவிச்சந்திரன், நன்றி தயாரிப்பாளர் வினோத்… உங்களுக்கு படத்தை காண்பிக்க காத்திருக்க முடியவில்லை.. நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்… வெகு விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம்!" என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவையும் விஷால் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…