சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரத்தைச் சேர்ந்த 35 வயதான மணிகண்டன், உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். காலையில் வழக்கம்போல் வீட்டிலிருந்து உளுந்தூர்பேட்டையில் உள்ள கடைக்கு டூவிலரில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, மூலசமுத்திரம் துணை மின்நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், மணிகண்டனை இடித்து கீழே தள்ளியது. இதில், சாலையில் அவர் கீழே விழுந்தார். இதனையடுத்து, பட்டா கத்தியுடன் காரிலிருந்து இறங்கிய அந்த கும்பல், சினிமா படப் பாணியில் மணிகண்டனைத் துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டி உள்ளது.

இதில், மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அந்த கும்பல் தனது காரை அங்கேயே விட்டுவிட்டு, நாளா புறமும் சிதறி ஓடினர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சினிமா பாணியில் நடந்த இந்த கொலை சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.