சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். பின் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன். தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஒ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி தற்போது சினிமாவில் கவனம் பெற்ற நடிகராக வளர்ந்துள்ளார். இவர் தற்போது சபா நாயகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நாளை அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற பிரபல தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அசோக் செல்வன் நடித்து வரும் திரைப்படம் ‘போர் தொழில்’. அப்லாஸ் எண்டர்ட்யின்மன்ட் மற்றும் E4 எக்ஸ்பரிமன்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் கலை செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கவுள்ளார். படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சரத் குமார் நடிக்கவுள்ளார். இவர்களுடன் நடிகை நிக்கிலா விமல் நடிக்கின்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை தமிழ் சினிமா பிரபலங்களாகிய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதையடுத்து போர் தொழில் படத்தின் முதல் பார்வை இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

துப்பாக்கியுடன் சரத்குமாருடன் தமிழ் நாடு காவல் துறை வழிகாட்டுதல் புத்தகத்துடன் அசோக் செல்வன் இருப்பதாக முதல் பார்வை அமைந்துள்ளது.கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘தெகிடி’ திரைப்படம் அட்டகாசமான கதைகளத்தை கொண்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்தது. அதை போல் இந்த போர் தொழில் திரைப்படமும் நிச்சயம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.