தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் திரைப்படத்தை தொடர்ந்து வடசென்னை 2 திரைப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் புதிய படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் விடுதலை. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும், விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.

அந்த வகையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தை இந்த மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் பாட விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலாக ஒன்னோட நடந்தா எனும் பாடல் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விடுதலை படத்தின் ட்ரெய்லர் நேற்று மார்ச் 8ம் தேதி வெளிவந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பையும் குமரேசன் எனும் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளார் நடிகர் சூரி.

இந்த நிலையில், நேற்று மார்ச் 8ம் தேதி விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, "இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்" என கூறிய போது, ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு "பார்ட் 2" என அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "பார்ட் 2வா ப்பா? இப்பதான் கதை எழுதிக்கிட்டு இருக்காரு சீக்கிரமா வந்துரும்” என பதிலளித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறனை பார்த்து, “ஏதாவது சொல்கிறேன் சார் நானும்… யார் யாரோ யூட்யூபில் என்னமோ சொல்கிறார்கள் நானும் ஒன்று சொல்லி வைக்கிறேன் சார்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் ரசிகர்களிடம், "வடசென்னை கதை பிரமாதமா இருக்கும் நான் கேட்டுட்டேன்" என்ன சிரித்தபடியே பேசினார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் வடசென்னை 2 பற்றிய அறிவிப்புகளுக்காக நாம் காத்திருப்போம்.