அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகள் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது தளபதி 67 படக்குழு. தளபதி விஜயின் பக்கா ஆக்சன் திரைப்படமாக 100% இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக தயாராகும் தளபதி 67 திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும், தளபதி 67 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் இணைந்து நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நாளை பிப்ரவரி 3ஆம் தேதி அது வெளியாகும் என தெரிகிறது. அதனை அறிவிக்கும் வகையில் தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என மிரட்டலான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சற்று முன்பு வெளியிட்டனர்.

முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் வகையிலான டிசைனில் வரையப்பட்ட அந்த போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி போஸ்டர் டிசைனர்களில் ஒருவரான கோபி பிரசன்னா தனது கை வண்ணத்தில் ரத்தம் தெறிக்கும் வகையில் வரைந்த அந்த போஸ்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக அனைவரின் கவனத்தையும் திருப்பிய அந்த போஸ்டரை உருவாக்கிய கோபி பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை வரைந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இதோ…