இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களுக்கு எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. முதல்முறையாக தானே இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விஜய் ஆண்டனி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி தன்னுடைய பாடல்களை ரசிகர்கள் முன்பு பாடியும் உரையாடியும் தனது வாழ்க்கை & திரைப் பயணத்தின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரோடு பேசுகையில், உங்களிடம் "பயம்" என்பதை நாங்கள் வெளிப்படையாக பார்த்ததில்லை. ஆனால் எல்லா மனிதனுக்கும் உள்ளூர ஒரு பயம் இருக்கும். விஜய் ஆண்டனி அவர்கள் எதற்கு பயப்படுவார்? என நாம் கேட்டபோது,

“என்னைப் பற்றி பயப்பட மாட்டேன். ரிஸ்க் எடுக்குறேன் அல்லவா சில நேரங்களில்... இப்போது நன்றாக இருக்கிறேன், சில நேரங்களில் சில திரைப்படங்களை தயாரித்து பயங்கரமான நஷ்டமாகிவிட்டது. அப்போது குடும்பத்தை நினைத்து கவலைப்படுவேன். நான் இருந்தால் எல்லாவற்றையும் தீர்த்து வைத்து எல்லோரையும் கொண்டு வந்துவிடலாம். ஒருவேளை பாதியில் நாம் இல்லாமல் போய்விட்டால் ஒரு விபத்து… இப்போது ஆனது அல்லவா மலேசியாவில் அது மாதிரி ஏதாவது நடந்து நான் இல்லாமல் போய்விட்டால் இவர்களை யார் பார்த்துக் கொள்வார். அய்யய்யோ எதுவும் சேர்த்து வைக்காமல் போய்விட்டோமே... இது மாதிரி மற்றவர்களைப் பற்றிய ஒரு கவலை உணர்வுகள் வரும். அந்த பயம் இருக்கும். என்னை பற்றி நான் இதுவரைக்கும் பயந்தது இல்லை. கொஞ்சம் தள்ளியே இருப்பேன் எப்போதுமே… இப்போது சொன்னீர்களே பிச்சை எடுப்பீர்களா என கேட்டீர்கள் அல்லவா அதற்கான தயார் நிலையில் தான் இருக்கிறேன். தனியாக ஒரு நான்கு பேர் நம்மை அங்கீகரிக்க வேண்டும் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு விஷயமும் இல்லாமல், இன்னொரு மாதிரியான பக்குவமும் எனக்கு இருக்கிறது. அதனால் தான் எனக்கு பயமில்லை என நினைக்கிறேன் .மற்றபடி ஒரு அப்பாவாக இருக்கிறேன் என் பசங்க ஒழுங்காக பள்ளிக்கு சென்று வர வேண்டும். எல்லோருக்கும் குடும்பத் தலைவனாக இருக்கும்போது அல்லது ஒரு குழுவின் தலைவனாக இருக்கும் போது அந்த ஒரு பயம் இருக்கும். இயற்கையில் என்னிடம் கேட்டீர்கள் என்றால் பயம் பெரிதாக கிடையாது” என விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனியின் இந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோ இதோ…