இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்ந்து தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் ரிலீஸாக காத்திருக்கின்றன. முன்னதாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் ரத்தம், இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளிமயில் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் வரிசையாக தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பிச்சைக்காரன் 2. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தயாரித்து இசையமைத்து படத்தொகுப்பும் செய்கிறார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜய் ஆண்டனி உடன் இருப்பதற்காக அவரது குடும்பத்தார் தற்போது மலேசியா புறப்பட்டுள்ளனர். மலேசியாவின் லங்காவி பகுதியில் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி நலமுடன் இருப்பதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் விஜய் ஆண்டனி அவர்கள் பூரண குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது.