தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசை அமைப்பாளர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி என விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

மேலும் தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் ரத்தம், இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளிமயில் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் வரிசையாக தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார்.

முன்னதாக மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி அவர்கள் விபத்தில் சிக்கினார். மலேசியாவின் லங்காவி பகுதியில் படகில் நடைபெற்ற படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜய் ஆண்டனி.

அவருடன் இருக்க அவரது குடும்பத்தினர் உடனடியாக இந்தியாவிலிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. விஜய் ஆண்டனி அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் மீண்டு வர கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது.

இந்நிலையில் தமிழ் படம் படத்தின் இயக்குனரும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் இயக்குனருமான CS.அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களே விஜய் ஆண்டனி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களிடம் பேசினேன். “அவர் நலமுடன் இருக்கிறார்”. விரைவில் மீண்டு வருவார்... வலுவோடு திரும்பி வாங்க நண்பா! இந்த வருடம் நமது தான்!” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் CS.அமுதனின் அந்த பதிவு இதோ…