ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் தரமான படைப்புகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த விஜய் ஆண்டனி முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. மலேசியாவில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பில் படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டு முகத்தில் பலத்த காயங்களோடு விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி அவர்கள் தற்போது நலமோடு இருப்பதாகவும் உடல்நிலை தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. முன்னதாக இயக்குனர் CS.அமுதன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்டோர் விஜய் ஆண்டனி அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், தற்போது முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொண்ட விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து முதல்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்பான நண்பர்களே! மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் தாடை மற்றும் மூக்கில் பலத்த காயமடைந்த நான் பாதுகாப்பாக தற்போது உடல்நிலை தேறி வருகிறேன். இப்போதுதான் ஒரு முக்கிய அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலை குறித்த உங்களது அக்கறைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டு மருத்துவமனையில் இருந்தபடி அனைவருக்கும் தனது கை (THUMBS-UP) மட்டும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…