தனக்கென தனி பாணியில் அழகான ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் சமீபத்தில் அது கைவிடப்பட்டது. இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கய்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்டகாசமான ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக விரைவில் ரிலீஸாக இருக்கும் அயலான் திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு, கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் பேசியபோது, “நீங்கள் இயக்காத திரைப்படங்களில் கூட பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள் அந்தப் பாடல்கள் குறித்தும் அதன் வரிகள் குறித்தும்” கேட்டபோது, “எனக்கு பிடிக்கும் ரெமோ திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும் அதில் நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள் நான்கு பாடல்களும் ரொம்ப பிடிக்கும்.. தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் “அந்த கண்ண பாத்தா” பாடல், நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். “நான் பார்த்த முதல் முகம் நீ” என அம்மா பாடல்.. அது வந்து யுவன் சங்கர் ராஜாவிற்கு, இயக்குனர் ஹெச்.வினோத் தான் அந்த வாய்ப்பை கொடுத்தார். அஜித் சாருக்கு நான் என்னை அறிந்தால் திரைப்படத்தில் “அதாரு அதாரு” பாடல் எழுதியிருந்தேன். அதன் பிறகு மீண்டும் எப்போதாவது பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தபோது, வலிமை திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நாங்க வேற மாதிரி எனும் முதல் பாடல் மற்றும் அம்மா பாடல் எழுதினேன்.” என பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம்,

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு எழுதி இருக்கிறீர்களா? எனக் கேட்டபோது, “ஆம் எழுதி இருக்கிறேன் அச்சம் என்பது மடமையடா படத்தில் “சோக்காலி” பாடல் எழுதினேன் பின்னர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடு நிகழ்ச்சி நடைபெற்றது முன்னோட்ட பாடலுக்கும் பணியாற்றினேன். இன்னொரு பாடல் எழுதி இருக்கிறேன். அது இன்னும் வரவில்லை. அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எழுதி இருக்கிறேன்." என பதிலளித்துள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலிருந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே பாடிய வேற லெவல் சகோ எனும் பாடல் வெளிவந்த ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அயலான் திரைப்படத்தில் மற்றொரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இருப்பதாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது ஏற்கனவே ரெமோ திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள் அனைத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் நம்பர்களாக ஒலித்த நிலையில், முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்திலும் பாடல்கள் அனைத்தும் மக்களின் மனதை கவரும் என சொல்லும் அளவிற்கு எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியிருக்கும் இந்த தகவல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த சிறப்பு பேட்டி இதோ...