தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படம் போடா போடி. சிலம்பரசன்.TR மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் இணைந்து முன்னணிக்கு கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த போடா போடி திரைப்படம் எதிர்பார்த்த அளவில் பெரும் வெற்றியை பெற தவறியது. இதனால் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக களமிறங்கிய திரைப்படம் நானும் ரவுடி தான். பல ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டு தள்ளிப்போன நானும் ரவுடி தான் திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளிவந்த விக்னேஷ் சிவனின் நானும் ரவுடி தான் திரைப்படம் ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து தனது மூன்றாவது படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹிந்தியில் வந்த செக்ஷன் 23 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆண்தாலஜி வெப் சீரிஸில் லவ் பண்ணா உட்ரனும் எனும் எபிசோடை இயக்கினார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அஜித் குமாரோடு AK62 படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கைகோர்ப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்துல திரைப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் பேட்டியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினார். முன்னதாக, “தன்னோடு இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்கள் குறித்து மனம் திறந்து பேசிக் கொண்டிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தளபதி விஜய்யோடு எப்போது படம் பண்ணுவீர்கள்?” என கேட்டபோது, “வாய்ப்பு கிடைக்கும் போது பண்ணுவேன்... பாட்டு எழுதி இருக்கிறேன்… மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதினேன். எல்லாமே நடக்கும்” என பதிலளித்தார். தொடர்ந்து தளபதி விஜய் உடன் பேசி இருக்கிறீர்களா? எனக் கேட்டபோது, “மாஸ்டர் சமயத்தில் அவர்கள் படத்துடைய பார்ட்டி நேரங்களில் அவருடன் பேசியிருக்கிறேன். அவர் மிகவும் இனிமையானவர். மேலும் மிகவும் பணிவானவர். நான் பார்த்திருக்கிறேன் எல்லா பெரிய நட்சத்திரங்களும் அவர்கள் அருகில் நாம் போகும்போது அவர்கள் மிகவும் பணிவாக தான் நடந்து கொள்கிறார்கள்.” என தெரிவித்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் நேர்காணலின் முழு பேட்டி இதோ….