நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ச்சியாக தரமான ஃபீல் குட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ளன. மேலும் நெட்ஃப்லிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் லவ் பண்ணா உட்ரனும் எனும் அட்டகாசமான எபிசோடை இயக்கினார்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களுடன், கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் தான் பணியாற்றிய நட்சத்திர நாயகர்களுடனான உரையாடல்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அந்த வகையில் பேசுகையில், நடிகர் சூர்யா உடன் பணியாற்றியது குறித்து பேசிய போது, "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்... அவர் மிகவும் அற்புதமான மனிதர்... அவர் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவார். தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போது என்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தார். அப்போது நான் அதை சாதாரணமாக அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்தார். பணத்தை கொடுத்து அதை உடனடியாக தீர்த்து வைக்க சொன்னார். அகரம் மூலமாக பலரது கல்வி சுமைகளை தாங்குகிறார். நானும் நயன்தாராவும் கூட பேசிக் கொண்டிருக்கிறோம், வீடு வேலைகள் முடிவடைய இருக்கிறது. அது முடிவடைந்த பிறகு நம்முடைய அடிப்படை விஷயங்கள் நிறைவடைந்த பிறகு நாம் இந்த சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றை செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறோம். தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படம் கிடையாது. அது ஒரு நல்ல படம் அவருக்கு பிடித்தது. அவர் எனக்கு ஒரு இன்னோவா காரை பரிசளிதித்தார். அந்த ஒரு செயல் இருக்கிறது அல்லவா? நான் ஒரு பிளாக் பஸ்டரோ அல்லது ஒரு பெரிய பாராட்டக்கூடிய ஒரு விஷயத்தையோ நான் செய்யவில்லை. ஒரு ரீமேக் படம் தான் நான் என்னுடைய பணியை 100% செய்தேன். அந்த சமயத்தில் அவர் என்னை அழைத்து நீ நன்றாக பணியாற்றினாய் என சொல்லி கொடுக்கும்போது, சில நேரங்களில் சில எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் வந்து சில பேர் படம் நன்றாக இல்லை என சொல்லும் சமயத்திலும் சூர்யா சார் மாதிரி ஒருவர் இப்படி ஒன்று செய்வது ஒரு அருமையான செயல் அல்லவா... எனவே எனக்கு சூர்யா சாரை மிகவும் விரும்புகிறேன்.” என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…