வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்தில் தமன்னா, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், மிர்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கிலும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மும்முரமாக தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ஜெயிலர் பட புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அனிருத் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘ரத்தமாரே’ பாடல் படத்தின் சில காட்சிகளுடன் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. தந்தை மகன் பாசத்தை வெளிப்படுத்தும் இப்பாடல் தற்போது இணையத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜெயிலர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தனது ஆண் குழந்தைகளுக்கு உயிர் என் ருத்ரோனில், உலக் என் தெய்வீக் என்று பெயரிட்டனர். அவ்வப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் திரை ஜோடிகளாக இதுவரை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருந்து வருகின்றனர். இவர்கள் குறித்த செய்தி ரசிகர்களிடம் அதிகம் வைரலாவது வழக்கம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அமைந்துள்ள ரத்தமாரே பாடல் குறித்து விக்னேஷ் சிவன் தன் மகன்களுக்காக எழுதிய பாடல் என்ற நெகிழ்ச்சி பதிவு ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.