தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ஆனால் முதல் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் மீது மிகப்பெரிய கவனம் ரசிகர்களுக்கு திரும்பாத நிலையில், சிறு இடைவெளிக்கு பிறகு தனது இரண்டாவது படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தன் பக்கம் ஈர்த்தார். நடிகர் தனுஷ் தயாரிப்பில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்க, வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்தார் விக்னேஷ் சிவன். அந்த வகையில் சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற, மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்தார்.

இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த (2022) ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படத்தில் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் பெற்றார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் சமீபத்தில் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மீண்டும் அஜித் குமாரோடு வேறு ஒரு படத்தில் விரைவில் விக்னேஷ் சிவன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது அடுத்த திரைப்படம் விரைவில் தொடங்க இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வர இருக்கின்றன.

இதனிடையே கடந்த ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களோடு, கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறை நயன்தாரா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார் தான் தருணம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில் “உண்மையில் முதல் முறை மிகவும் சாதாரணமாக தான் நயன்தாராவை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன். நான் எங்கள் வீட்டில் சொன்னேன், “நயன்தாரா என் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் வீட்டிற்கு வரவேண்டும் என்று கேட்டார் அவரை நான் அழைத்து வருகிறேன் என சொல்லிவிட்டு கூட்டி வந்தேன். அவரை அழைத்து வருகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் அனைவரும் மிகுந்த உற்சாகமாகிவிட்டனர். ஆனால் விஷயத்தை எதையுமே நான் சொல்லவில்லை. அவர் பாட்டுக்கு வந்தார் சாப்பிட்டார் கொஞ்ச நேரம் இருந்து பேசிவிட்டு சென்றார். அதற்கே எங்கள் வீட்டில் எல்லாரும் பயங்கரமாக உற்சாகமடைந்து விட்டார்கள். அதன் பிறகு பொறுமையாக தான் நான் சொன்னேன்." என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…