சம கால இந்திய சினிமாவில் கவனிக்கதக்க முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகம் திரைப்படம் வரை வித்யாசமான கதைகளங்களில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரி விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் பெரும்பாலான திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சரண் ராஜ் என்பவர் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சரண் ராஜ் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வந்த கார் சரண் ராஜ் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சரண் ராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதி காவல்துறையினர் சரண் ராஜ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்ததை உறுதிப் படுத்திய பின் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணையில் , பழனியப்பன் என்பவர் இந்த விபத்தை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர்.மது போதையில் கார் ஒட்டி சென்று இந்த விபத்தை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சரண் ராஜ், பழனியப்பன் நண்பர்கள் என்றும் தெரிய வருகிறது. சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி தற்போது பழனியப்பன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது உதவி இயக்குனர் சரண் ராஜ் உயிரிழந்த சம்பவம் திரையிலகில் அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.