5 பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதிக்கு, தொடர்ந்து வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்படி 7 வயதில் லத்திகாவும், 3 வயதில் ஹாசினியும், ஒன்றை வயதில் கீர்த்திகா என்ற பெண்குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் கருவுற்ற சத்யாவிற்கு, 4வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வெங்கடேசன் - சத்யா தம்பதியினர் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இதனால் இருவரும் மனமுடைந்த காணப்பட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, பாலில் விஷம் கலந்து தாய் சத்தியா, தனது மகள் ஹாசினிக்கும், ஒன்றரை மாத பெண்குழந்தைக்கும் கொடுத்துள்ளார்.

இந்த பாலை அருந்திய 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். பின்னர் சத்யாவும் விஷம் கலந்த பாலை குடித்துள்ளார். இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், சத்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் காப்பாற்றப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், சத்யாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2016 ஆம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, சத்துவாச்சாரியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சத்யாவிற்கு 6 வருடங்கள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பாக, வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த இடைப்பட்ட காலத்தில், சத்யாவிற்கு 5 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.