சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியான இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து வெற்றி பெற செய்துள்ளனர். இதுவரை மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் படக்குழுவினருடன் சமீபத்தில் மாவீரன் திரைப்படத்தை பார்த்துள்ளார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் படம் குறித்தும் படக்குழுவினர் பற்றியும் பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

பேட்டியில் அவர் பேசியதாவது, மிகவும் வித்தியாசமான கதை அமைப்பு. கதையை சொல்லியிருக்கும் முறை பாராட்டிற்குரியது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த திரைக்கதை மிகவும் சிறப்பாக பின்னப்பட்டிருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக கூவம் நதிக்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். சென்னையில் இருந்து அப்புறப்படுத்துகிற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.

காலம் காலமாக குடியிருந்து வரும் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும் போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை சித்தரிக்கிற திரைப்படமாக மாவீரன் விளங்குகிறது. சென்னையில் பல இடங்களில் கூவம் நதிக்கரையில் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று அரசு சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருகிறது. அவ்வாறு மாற்றுக் குடியிருப்புகளை உருவாக்கி தருகிற நிலையில் அதன் தரம் என்னவாக இருக்கிறது. அதில் அரசியல் எந்த அளவிற்கு தலையீடு செய்கிறது. அதனால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை திரைப்படத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு இயக்குனர் தன்னுடைய கற்பனை திறனை மூலதனமாக வைத்து மிகச்சிறப்பாக கதையை தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் விறுவிறுப்பாக சொல்லி வருகிறார்

நடிகர் சிவகார்த்திகேயன் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக அதிதி ஷங்கர் மணம் கவரும்படி நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புகழ் பெற்ற திரைநட்சத்திரம் நடிகை சரிதா இந்த படத்தில் நடித்துள்ளது இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகள் அப்புறப்படுத்தும் போது அந்த மக்கள் கதறி அழும்போது நேரில் சென்று அந்த மக்களை ஆற்றுப்படுத்தியுள்ளேன் என்கிற முறையில் இந்த படத்தை பார்க்கிற போது நான் நேரடியாக அந்த களத்தில் நிற்பதை போன்ற உணர்வை பெற்றேன். சில இடங்களில் அந்த மக்களின் துயரத்தை எண்ணி கண்கலங்க நேர்ந்தது. காட்சிகள் அந்த அளவிற்கு உயிரோட்டமாக அமைந்தது.
என்றார் திருமாவளவன்.

மேலும் தொடர்ந்து, பொதுவாக படத்தின் கதாநாயகர்கள் பெரிய ஆளுமை மிக்கவர்களாக காட்டப்படுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகனை பயந்த சுபாவம் உள்ளவராக தொடக்கத்தில் இருந்து சித்தரிக்கிற இயக்குனர் ஒரு அசரீரி குரல் மூலம் கதாநாயகனை இயக்கும் காட்சி ஒவ்வொரு கட்டத்திலும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் மிஷ்கினை பார்த்து கதாநாயகன் கேள்வி எழுப்பும் காட்சி என்பது மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அந்த காட்சி திரைப்படத்தின் குரலாக இல்லாமல் ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் விளிம்பு நிலை மக்களின் அவல குரலாக உள்ளது. அசரீரி குரல் மூலம் கதாநாயகன் இயக்கும் காட்சி என்பது ஒரு வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது என்றார் திருமாவளவன்.