தமிழ் சினிமாவின் இருவரும் துருவங்களாக தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களாக இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இருவரின் படங்களும் தற்போது பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகியிருக்கின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வீரம் மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து தற்போது வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன.

வழக்கத்தை விட இந்த முறை இரண்டு தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ஃபேமிலி என்ட்ர்டெய்னர் திரைப்படமாக வாரிசு திரைப்படமும், பக்கா ஆக்ஷன் என்ட்ர்டெய்னர் திரைப்படமாக துணிவு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் வசூலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பொங்கல் போட்டியில் வெற்றியாளர் யார் என்ற கருத்துகளும் சோசியல் மீடியாவில் அங்கும் இங்குமாய் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வாரிசு குழுவினர் நன்றி கூறும் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் வம்சி பைடிபல்லியை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் வசூல் நிலவரம் குறித்த கேள்விகளை அடுக்கடுக்காக அடுக்கினர், வாரிசு திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன? துணிவு திரைப்படம் அதிகம் வசூலித்துள்ளதாக சொல்கிறார்களே? துணிவு - வாரிசு இரண்டில் எந்த திரைப்படம் வசூல் ரீதியில் வென்றது? என பல கேள்விகளை ஒரே சமயத்தில் கேட்டனர்,
அப்போது பேசிய இயக்குனர் வம்சி பைடிபல்லி, “அது அதிகமா, இது அதிகமா… இரண்டு படங்களும் நன்றாக போகிறது அல்லவா! அதுதான் வேண்டுமெல்லவா! கதையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம் அல்லவா... சகோதரரே நான் ஒரு முறை சொல்கிறேன். வாழுங்கள் வாழ விடுங்கள் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! அதுதான் சொல்ல விரும்புகிறேன்… நன்றி!" என பதிலளித்துள்ளார்.