மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்திலிருந்து அடுத்த புதிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவராக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்ததாக தற்போது நடிகர் கலையரசன் மற்றும் நான்கு சிறுவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து அர்ஜுனா விருது பெற்ற இந்தியாவின் கபடி விளையாட்டு வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக, துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். எனவே சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு ஒன்றை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வெளியிட்டார். தனது ஸ்டூடியோவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், மாரி செல்வராஜ், தேனி ஈஸ்வர், யுகபாரதி மற்றும் வடிவேலுவுடன் இருக்கும் இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டு, “நம் வைகைப்புயல் வடிவேலுவுடன் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டது. எங்களை மொத்தமாக சிரிக்க வைத்த அவர் இந்த நேரத்தை நினைவில் வைக்க வேண்டிய ஒரு தருணமாக மாற்றி இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். எனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைகைப்புயல் வடிவேலு, மாமன்னன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தனக்கே உரித்தான ஸ்டைலில் அட்டகாசமான பாடல்களை அவ்வப்போது பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் வடிவேலு, அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பாடிய “பணக்காரன்” பாடல் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த வரிசையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாமன்னன் படத்தில் வடிவேலு பாடி இருக்கும் இந்த பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட அந்த இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…