வைகைப்புயல் வடிவேலு அவர்களின் திரைப் பயணத்திலேயே மிக முக்கிய திரைப்படமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திருப்பி இருக்கும் மாமன்னன் திரைப்படம் தனக்கு தேவர் மகன் படத்திற்கு பிறகு மற்றொரு பெரிய படம் என வடிவேலு அவர்களே தெரிவித்திருக்கிறார். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரோடு இணைந்துள்ள வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் "ராசா கண்ணு" எனும் அருமையான பாடலையும் வைகைப்புயல் பாடி இருக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் , நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் விழா தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பேசிய வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் & செவாலியே சிவாஜி கணேசன் இணைந்து நடித்த வெளிவந்து காலம் கடந்து என்றென்றும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாக திகழும் தேவர் மகன் திரைப்படத்திற்கு பிறகு மாமன்னன் திரைப்படம் தனக்கு ஒரு பெரிய படம் என பேசி இருக்கிறார்.

அப்படி பேசுகையில்,

“ஒரு அருமையான கதையை உதயநிதி சார் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்கு மிகப் பெருமையாக இருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் என்னவென்றால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் பாடி இருக்கிறேன் இந்த படத்தில்... அதை நான் பாடவில்லை அவர் என்னை பாட வைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்னை பாட வைத்திருக்கிறார். இப்போது மறைந்த என்னுடைய தாய்… என் அம்மா என்னை அழகாக பாடத் தூண்டி, எனக்கு ஊக்கம் கொடுத்து எனக்கு துணையாக இருந்து இந்த படத்தில் எனக்கு வெற்றி முகத்தை கொடுத்து இருக்கிறார். என் தாயை இந்த நேரத்தில் நான் நினைக்கிறேன். இறந்து போன அம்மா என் உடம்போடு உடம்பாக வாழ்கிறார் என்பதை இந்த படத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். அப்படி ஒரு அருமையான கதை களத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் பெரிய வெற்றி பெறும். நீங்கள் படம் வந்த பிறகு பாருங்கள். தேவர் மகனுக்கு பின்னால் இது ஒரு பெரிய படம் எனக்கு. தேவர் மகன் அரசியல் படம் கிடையாது. இது அரசியல் படம்.”

என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்ட வைகைப்புயல் வடிவேல் அவர்களின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.