காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் பெண் ஒருவர் விஷம் வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள மைனாதர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்பவரைக் காதலித்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது கூட ஆகாத நிலையில், இந்த விசயம் சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வர, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு, இதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இதே அரவிந்த்குமார் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்த அரவிந்த்குமார், மீண்டும் சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

தற்போதும் காதலுக்குச் சிறுமியின் வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறுமியின் வீட்டிற்கே சென்ற அரவிந்த்குமார், காதலுக்குச் சம்மதிக்கவில்லை என்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால், மிரட்டலையும் மீறி சிறுமியின் வீட்டில் காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அம்மா, அப்பா, அண்ணன்கள், சகோதரிகள் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் விஷம் வைத்து கொலை செய்யச் சிறுமி முடிவு செய்து, கடையிலிருந்து விஷத்தை வாங்கி வைத்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவில், அந்த விஷத்தைக் கலந்துகொடுத்து, அனைவரும் சாப்பிடும் வரை அமைதியாக இருந்திருக்கிறாள்.

அப்போது, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து, அந்த சிறுமி தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதனிடையே, அந்த வீட்டிற்கு எதேச்சையாக வந்த அவர்களது உறவினர், வீட்டில் அனைவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன், அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், 2 பேர் குணமடைந்துள்ள நிலையில், மற்றவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விஷம் வைத்துவிட்டு ஓடிப்போன சிறுமியையும், அவனது காதலனையும் தேடி வருகின்றனர்.

காதலுக்காக, குடும்பத்தில் உள்ள அனைவரையும் சிறுமி ஒருவள் விஷம் வைத்து கொலை செய்ய முயன்றது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.