அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் சூப்பர் ஸ்டாராக 48 ஆண்டுகளை தனது திரை பயணத்தில் கடந்தும் இடைவிடாது தன்னுடைய படங்களால் மக்களை மகிழ்வித்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகி எக்கச்சக்கமான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும், இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தன. அந்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தையும் ஜெயிலர் படம் தவிட்டுபோடியாகும் என ஜெயிலர் ஷோகேஸ் ட்ரெய்லர் பார்த்த அனைவரும் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் உதய்பானு மகேஸ்வரன் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், ட்ரெய்லரில் சில விஷயங்களை நெல்சன் வெளிப்படுத்திவிட்டாரோ? எனக் கேட்டபோது, “அதுதான் நான் சொல்கிறேன் அல்லவா அவர்கள் காட்டியது ஒரு துளி தான் இன்னும் கடலே இருக்கிறது நீங்கள் பார்க்காதது.” என தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து, “ட்ரெய்லரில் உங்களை காட்டியது உங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும் ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது மோகன்லால் இருக்கிறார்.. தமன்னா இருக்கிறார்.. ரெடின் கிங்ஸ்லி இருக்கிறார்.. சிவராஜ்குமார் இருக்கிறார்.. ஆனால் யாரையுமே ட்ரெய்லரில் காட்டவில்லையே? அதற்கு என்ன காரணம்?” எனக் கேட்டபோது, “ஒரு இயக்குனர் சில நேரங்களில் சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பார். சில விஷயங்களை மெதுவாக காட்டிக் கொள்ளலாம் என நினைப்பார். அப்படி செய்வது கதைக்கு இன்னும் மதிப்பை கூட்டும். எனவே அந்த மாதிரி தான் அவரும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.” என பதில் அளித்து இருக்கிறார். ரஜினிகாந்த் அவர்கள் குறித்தும் ஜெயிலர் படம் குறித்தும் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகர் உதய்பானு மகேஸ்வரனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.