தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாமன்னன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்த அழுத்தமான படைப்பாக மாமன்னன் படத்தை உருவாக்கியுள்ளார். அடுத்ததாக அர்ஜுனா விருது பெற்ற இந்தியாவின் கபடி விளையாட்டு வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக, துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் கலையரசன் மற்றும் நான்கு சிறுவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாழை திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான “ராசா கண்ணு” பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இசைப்புயல் இசையில் வைகைப்புயல் பாடி வெளிவந்த ராசா கண்ணு பாடல் ரசிகர்களின் மனதை உருக்கியது. இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவரும் அடுத்தடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வருகிற மே 27ஆம் தேதி மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த ரைடுக்கான நேரம் வந்துவிட்டது.. வரப்போகும் பயணத்திற்காக தயாராகுங்கள்.. கனவு ஹீரோ இதோ!” என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிட்டு மாமன்னன் இரண்டாவது பாடலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டைலான புகைப்படத்தோடு இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்ட அந்த அறிவிப்பு இதோ…