இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் அரசியல் படமான மாமன்னன் திரைப்படத்தோடு இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்து இருக்கும் மற்றொரு அரசியல் படமான உயிர் தமிழுக்கு படமும் ரிலீஸாக இருக்கிறது. பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த ஜூன் மாத இறுதியில் அனேகமாக ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பக்ரீத் பண்டிகை தினமான இந்த ஜூன் 29ஆம் தேதி இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை தயாரித்துள்ள ஆதம்பாவா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளனர். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்ள, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ‘உயிர் தமிழுக்கு’ படம் மூலம் இசையமைப்பாளர் வித்யாசாகர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

உயிர் தமிழுக்கு படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாத இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு இந்தப்படத்தை வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். இந்த நிலையில் மாமன்னன் படத்தையும் பக்ரீத் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, சென்டிமென்ட்டாகவும் இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருகிறேறேன் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா கூறியுள்ளார். மாமன்னன் படம் அரசியலை சீரியஸாக பேசுகிறது என்றால் உயிர் தமிழுக்கு படம் இன்னொரு விதமாக நையாண்டி கலந்து அரசியலை பேச வருகிறது. அந்தவகையில் இந்த இரண்டு படங்களுமே ஆரோக்கியமான போட்டியுடன் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.