உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஸ்பெஷல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தரமான சமூக நீதி படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலேயே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படமான கர்ணன் திரைப்படத்தில் இன்னும் பெரிய பாதிப்பையும் சமூகத்திற்கான விவாதங்களையும் ஏற்படுத்தினார். இந்த வரிசையில் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த மிகப்பெரிய பாதிப்பாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மாமன்னன்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து இருக்கிறார். இதனால் மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே மாமன்னன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே தொற்றிக் கொண்டது. அதற்கு அடுத்தபடியாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இதுவரை தான் ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டியது. தொடர்ந்து மிரட்டலான வில்லனாக நடிப்பு அரக்கன் பகத் பாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் என பெரும்படையோடு மாரி செல்வராஜ் இறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் கைக்கோர்த்தார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். வழக்கம்போல் அனைவரும் சமம் என்கிற முக்கிய சமூக நீதியை பேசும் வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் இடையே ஏதோபித்த வரவேற்பை பெற்று தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த மினி கூப்பர் காரை மாரி செல்வராஜ் அவர்களுக்கு வழங்கும் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.”

எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…