தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி திரைப்படம் என முன்பே அறிவித்திருந்தார். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு இணைந்து வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் நேற்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல அரசியல் கதைகளம் கொண்ட திரைப்படமாக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படம் மிகச்சரியான கடைசி படமாக அமைந்திருக்கிறது என சொல்லலாம். இதுவரை வடிவேலு அவர்களை இப்படி ஒரு கோணத்தில் பார்க்கவில்லை என சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளிக் கொணர்ந்திருக்கிறார். மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் திரைப்படத்தை தனது இசையால் வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் நமக்கு கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், “உங்களுடைய சினிமா வருகையை பற்றி உங்களுடைய தாத்தா (மு.கருணாநிதி அவர்கள்) என்ன சொன்னார்?” என கேட்டபோது, “நான் சினிமாவிற்கு வந்தது.. நான் நடிக்க ஆரம்பித்ததே அவருக்கு தெரியாது... கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ரிலீஸாகிவிட்டது. எனக்கு போன் செய்து, ‘என்னடா நீ படத்தில் நடித்திருக்கிறாயா?" எனக் கேட்டார். அவரிடம் நான் எதுவும் சொல்லவே இல்லை. அவருக்கு யாரோ போய் சொல்லி இருக்கிறார்கள். இந்த மாதிரி தம்பி ஒரு படம் நடித்திருக்கிறார், பெரிய ஹிட் என சொல்லி இருக்கிறார்கள். அவர் போன் செய்து கேட்கும் போது, ‘ஆமாம் தாத்தா ரிலீஸாகிவிட்டது.’ என்றேன். ‘படம் பெரிய ஹிட்டாமே?’ என கேட்டார், ‘ஆமாம் தாத்தா, நல்லா போகிறது’ என்றேன். ‘உடனே படம் பார்க்க வேண்டும்’ என்றார். உடனே அவருக்காக ஒரு சிறப்புக் காட்சியை தயார் செய்து, தாத்தாவும் பாட்டியும் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்தார்கள். இரண்டாவது படமும் பார்த்தார்கள். கதிர்வேலன் காதல் படமும் பார்த்துவிட்டு பெரிதாக ஒன்றும் பாராட்டு எல்லாம் இல்லை.. பாராட்டுவதற்கும் அதில் ஒன்றும் இல்லை.. எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது மனிதன் திரைப்படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று.. ஆனால் அதை கடைசி வரையில் காட்ட முடியவில்லை அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தியேட்டரில் வந்து உட்கார்ந்து படம் பார்க்க முடியவில்லை அவரால்.. இந்த படம்(மாமன்னன்) காட்ட முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. இந்த படத்தை பார்த்திருந்தார் என்றால் என்னையும் இவரையும் கண்டிப்பாக பாராட்டி இருப்பார்." என உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். இன்னும் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.