சிறுமிக்குத் திருமணம் ஆசை காட்டி பலத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் 29 வயதான மாரிமுத்து, அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு, அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர் மனதை மாற்றியுள்ளார். இதனையடுத்து, விபரம் தெரியாத அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்று, மாரிமுத்து உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாகச் சிறுமி கருவுற்ற நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தன்னை மாரிமுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் தேதி சிறுமி, ஸ்ரீ வைகுண்டம் காவல் துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த போலீசா், மரபணு பரிசோதனையின் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பு அளித்தார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.