ஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் உள்ள படர்காட் பகுதியில் 32 வயது குடும்ப பெண் ஒருவர், தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சம்பவத்தன்று, மருத்துவமனைக்குச் சென்று தனது மகளைப் பார்த்துவிட்டு, வீட்டில் பொருட்களை எடுத்துவருவதற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வழக்கமாகச் செல்லும் ஆட்டோ ரிக் ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், புதிய வழியில் சென்றுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த அந்த பெண், வண்டியை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு, எப்போதும் செல்லும் வழியில் ஏதோ பிரச்சனை இருப்பதால், இந்த புதிய வழியில் வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த வண்டியில் வேறு சிலர் ஏறி, அந்த பெண்ணை ஒரு காரில் கடத்தி உள்ளனர்.

இதனையடுத்து, காரிலேயே அந்த பெண்ணை 9 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, கொடூரத்தின் உச்சமாக ஓடும் காரிலிருந்தே அந்த பெண்ணை ரோட்டிலியே தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போது, இதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர் பிரதீப் தாஸ், ராதாப் தாஸ் உள்ளிட்ட 6 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.