சினிமா பாணியில் துரத்திப் பிடித்த பொதுமக்கள் திருச்சியில் ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமி கடத்தப்பட்டதால், சினிமா பாணியில் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர், அருகில் உள்ள துலுக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவத்தினல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வேலையை முடிந்துவிட்டு, தனது தந்தையுடன் டூவிலரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது, வழியிலேயே வேனில் வந்து வழி மறித்த 5 பேர் கொண்ட கும்பல், தந்தையைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, இளம் பெண்ணை வேனில் கடத்தியுள்ளனர். இதனையடுத்து, வேனின் பின்னால் அவரது தந்தை கத்திக்கொண்டே துரத்திச் சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், வேனை துரத்திக்கொண்டே சென்றுள்ளனர். இதனிடையே, கடத்தல் வேன் திண்டுக்கல் சாலையிலிருந்து, திருச்சி நோக்கிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் போகவே, பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கே போலீசாரும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்தனர்.

சுங்கச்சாவடி அருகே சென்றதும், போலீசார் அதிகம் பேர் நிற்பதைப் பார்த்த கடத்தல் கும்பல், வேனை மீண்டும் திண்டுக்கல் நோக்கித் திருப்பியுள்ளனர். இதனையடுத்து, இந்த தகவல் மணியாரம்பட்டி மற்றும் கல்பட்டி கிராம மக்களுக்குப் பரப்பப்பட்டது.

இதனால், இரு கிராம மக்களும் திரண்டு, பக்கிரிக்காடு அருகே ரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வெளிச்சம் இல்லாத இடத்தில் நின்றுள்ளனர். அப்போது, கடத்தல் வேனை ஓட்டிவந்தவன், சாலையின் நடுவே 100-க் கணக்கனோர் நிற்பதை திடீரென்று பார்த்து, சட்டென்று பிரேக் அடித்துள்ளான். இதில், வேகமாக வந்த வேன், நிலை தடுமாறி தலைக்குப்புற சாலையிலேயே கவிழ்ந்து விழுந்தது.

இதில், வேனிலிருந்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இளம் பெண்ணை மீட்ட கிராம மக்கள், வேனிலிருந்த 5 பேரையும் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், அடி தாங்க முடியாமல், 2 பேர் தப்பி ஓடிய நிலையில், மீதியிருந்த 3 பேரையும், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பின்னடி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளி குழந்தைவேல் என்றும், அவர் இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் என்றும் தெரிய வந்தது.

மேலும், 17 வயது இளம் பெண்ணை, குழந்தைவேல் ஒருதலையாகக் காதலித்ததும், அதனால், சிறுமியைக் கடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், படுகாயம் அடைந்த 3 கடத்தல்காரர்களும், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தலைமறைவாகவுள்ள குழந்தை வேலுவையும், அவனது கூட்டாளியான செல்லபாண்டியனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.