பெண் கல்லூரி பேராசிரியரைக் கடத்தியதாக அதிமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் மகாலட்சுமி, கல்லூரிக்குக் கிளம்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் முன்னாடி திடீரென்று ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், கண் இமைக்கும் நேரத்தில், மகாலட்சுமியை ஆம்புலன்ஸில் கடத்தி உள்ளனர்.

அப்போது, மகாலட்சுமி கத்தி கூச்சல் போடவே, அந்த வழியாகச் சென்றவர்கள், ஆம்புலன்ஸை துரத்திக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் வேகமாகச் சென்று மறைந்துள்ளது.

இதனையடுத்து, மகாலட்சுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, துவரங்குறித்து அருகே மகாலட்சுமியை அந்த கடத்தல் கும்பல், இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பெண்ணை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய பிரமுகரான வணக்கம் சோமு, அடியாட்களுடன் மகாலட்சுமியைக் கடத்தியது தெரியவந்தது.

இதனிடையே, அதிமுக பிரமுகரான வணக்கம் சோமுவுக்கும், கடத்தப்பட்ட மகாலட்சுமிக்கும் என்ன தொடர்பு என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், கல்லூரி பேராசிரியை கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.