கடந்த 2021 ல் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகி இந்திய ரசிகர்களை ஆச்சர்யப் படுத்திய திரைப்படம் ‘மின்னல் முரளி’. வீக்கென்ட் பிளாக்பஸ்டர் தயாரிப்பில் சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகி மலையாள திரையுலகில் வெளியான மின்னல் முரளி படத்தை இயக்குனர் பாஸில் ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் மின்னல் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடித்திருப்பார். அவருக்கு இணையான சக்திகளுடன் கொடூர விள்ளத்தனதுடன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் குரு சோமசுந்தரம். மேலும் இவர்களுடன் அஜூ வர்கீஸ், ஷெல்லி கிஷோர், பெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இந்திய ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மின்னல் முரளி திரைப்படம் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ட்ரென்ட்டிங்கில் தொடர்ந்து முதலிடம் வகித்தது. இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்திற்கு மார்வெல், டிசி காமிக்ஸ்கு நிகரான பாராட்டுகளை தெரிவித்து மின்னல் முரளி திரைப்படத்தை விமர்சன ரீதியாக உச்சிக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும் விருதுகள் பொறுத்தவரை, கேரளா மாநில விருதுகளில் 5 விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்தது. இதில் குறிப்பாக ஆசிய கண்டத்தில் உயரிய விருதான ஆசியா அகாடமி விருதினை சிறந்த இயக்குநருக்காக வென்றது மின்னல் முரளி திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மின்னல் முரளி சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தற்போது காமிக்ஸ் வடிவில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காமிக்கினை பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் அமர்சித்ரா கதா, டிங்கிள் காமிக் ஸ்டுடியோ மற்றும் ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளனர். இந்த காமிக்ஸ் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் காமிக் கான் நிகழ்வில் வெளியாகவுள்ளது இந்தியாவை பொறுத்தவரை மார்வல், டிசி மற்றும் இதர காமிக் வாசிப்பாளர்கள் உள்ள நிலையில் தற்போது இந்திய வடிவில் இது போன்ற காமிக் கதைகளை மீண்டும் கொண்டு வந்து வாசகர்களை அதிகரிக்கும் முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது காமிக் வடிவில் வெளியாகியுள்ள அட்டைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.