வேலூர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்துள்ளன. இதில், சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் ரயிலும், ஜோலார்பேட்டையிலிருந்து அரக்கோணம் மின்சார ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளது.

இதனால், அரக்கோணம் மின்சார ரயில் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். இதனிடையே, நேருக்கு நேர் வந்த 2 ரயில்களும் 100 மீட்டர் தூர இடைவெளியில் நிறுத்தப்பட்டன. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அரக்கோணம் மின்சார ரயில் பயணிகள், சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் நீண்ட நேரம் வழியிலேயே காத்திருந்தனர். இதனையடுத்து, ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனிடையே, 2 ரயில்களும் நேருக்கு நேர் வந்தது தொடர்பாக ரயில்வே கட்டுப்பாட்டு அறையிலிருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.