தருமபுரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பூச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், சுமார் 140-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இங்குச் சுப்பிரமணி என்பவர், தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இதனிடையே, தலைமையாசிரியர் சுப்பிரமணி, பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் செய்வதாகப் பாதிக்கப்பட்ட பல மாணவிகள், தங்களது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, குழந்தைகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரைப் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, மீண்டும் பள்ளி மாணவி ஒருவரை, தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகச் சீண்டியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடிச் சென்ற மாணவி, பள்ளியில் தனக்கு நடந்தவற்றைப் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் ஊர் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து விரைந்து வந்த ஏரியூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சுப்பிரமணியைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.