கோவை அருகே 3-வது மனைவி தேடிய கணவரை மற்ற 2 மனைவிகளும் ரோட்டில் வைத்துப் புரட்டி எடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.

கோவை மாவட்டம் சூலூர் நேரு நகரில் வசித்து வரும் அரவிந்த தினேஷ், ராசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் தொடர்பான வேலை செய்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த அடுத்த 15 நாட்களிலேயே மனைவியை அவர் அடித்து துன்புறுத்தத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அரவிந்த தினேஷ் மீது புகார் அளித்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த அனுப்பிரியாவை 2 வது திருமணம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, அனுப்பிரியாவையும் அவர் அடித்துக் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், அனுப்பிரியாவும் கணவனின் அடி தாங்க முடியாமல், தன்னுடைய அம்மா வீட்டிற்கே சென்று விட்டார்.

முதல் மனைவி இருக்கும்போதே, 2 வது திருமணம் செய்த அரவிந்த தினேஷ், 3 வது திருமணம் செய்வது தொடர்பாகத் திருமண வலைத்தளத்தில் மணமகள் தேடி விண்ணப்பித்திருந்தார். இந்த தகவல் அவருடைய 2 மனைவிகளுக்கும் தெரியவந்தது. இதனையடுத்து, இரு மனைவி வீட்டாரும் அவரிடம் நியாயம் கேட்டபோது, இரு வீட்டாரையும் அவர் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இரு மனைவிகளும் ஒன்று சேர்ந்து, அரவிந்த தினேஷ் பணியாற்றும் நிறுவனத்திற்கே சென்று, அவரை வெளியே அனுப்பும் படி கேட்டுள்ளனர். ஆனால், அவர் வெளியே அனுப்ப நிர்வாகம் மறுத்த நிலையில், இரண்டு மனைவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து விரைந்து வந்த போலீசார், இருமனைவிகளையும் காவல் நிலையத்திற்கு வரும்படியும், அவரது கணவரையும் காவல் நிலையத்திற்கு வரும்படி அந்த நிறுவனத்திடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அப்போது, அரவிந்த தினேஷ் வெளியே வரவே, இரண்டு மனைவிகளும் ஒன்றுசேர்ந்து அவரை புரட்டி எடுத்து, தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, அந்த நிறுவத்தின் ஆட்கள் அரவிந்த தினேசை காப்பாற்றி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, இருமனைவிகளும் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இருமனைவிகளிடம் கணவர் அடிவாங்கிய வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.