திருவள்ளூர் அருகே ஒருவர் மது போதையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தைச் சேர்ந்த 37 வயதான பொன்ராஜ், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மது அருந்திவிட்டு, தனது காரில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஷியாம், அந்த வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஷியாமை அழைத்த பொன்ராஜ், பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று சிகரெட் வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். ஆனால், சிகரெட் வாங்கிவர முடியாது என்று ஷியாம் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், போதையிலிருந்த பொன்ராஜ், கோபமடைந்து, தனது காரில் இருந்து கத்தியை எடுத்து வந்து மிரட்டி உள்ளார். அதற்கும் அவர் பயம் இல்லாமல் பதில் அளித்ததால், கடும் கோபமடைந்த பொன்ராஜ், ஷியாமை சரமாரியாகக் கத்தியால் குத்தி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த ஷியாமை, அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஷியாமின் நண்பர்கள், பொன்ராஜின் வீட்டை அடித்து உடைத்து, அவரது காரையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதனிடையே, இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பொன்ராஜை தேடி வருகின்றனர்.