டிக்டாக் மோகத்தால் “உன் மனைவியை ஒழுங்கா அனுப்பி வை.. இல்லனா, சாவடிச்சிருவேன்” என்று கணவனை ஒருவர் மிரட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு விபரீதம் ஆகும் என்று நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. குறிப்பாக, இணையதளத்தில் விளையாடும்போதும், சாட்டிங் செய்யும் போதும் அல்லது சமூக வலைத்தளங்கள் வழியாகப் புதிது புதிதாக நட்பை வளர்த்துக்கொள்பவர்களை வீட்டில் உள்ளவர்கள் அதிகம் எச்சரிப்பதுண்டு. இப்படியான பழக்கங்கள், கடந்த காலங்களில் அதிகம் விபரீதமாகத்தான் முடிந்திருக்கிறது. தற்போது, அதற்கு ஒரு உதாரணம் சொல்லும் சம்பவம் தான் மீண்டும் நமது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

கிரிஷ்ணகிரியைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளம் பெண் ஒருவர், டிக்டாக்கில் தனது வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்து ரசித்து கமெண்ட் செய்வது தொடர்பாக, 32 வயதான மோகன் குமார் என்பவர் இணையதளத்தில் அப்பெண்ணுடன் நட்பாகி உள்ளார்.

நாளடைவில், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக மோகன் குமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், அவரது தொல்லையைப் பொறுக்க முடியாமல், தனது கணவரிடம் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார். கணவரும், மோகன் குமாரை எச்சரித்துள்ளார்.

இதற்கெல்லாம் அஞ்சாத மோகன் குமார், விபரீதத்தின் உச்சமாகக் கணவனிடமே போன் செய்து, “உன் மனைவியை ஒழுங்கா அனுப்பி வை.. இல்லனா, சாவடிச்சிருவேன்” என்று மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் - மனைவி இருவரும், கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மோகன் குமார் இருக்குமிடத்தைக் கண்டறிந்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் டிக்டாக் மோகத்தால் பல பெண்கள் கவர்ச்சியில் எல்லை மீறுவதும், அதனால் பாலியல் தொல்லைகளை அனுபவித்து தற்போது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.