தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பாடலாசிரியராக திகழும் வைசாக் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தில் இடம் பெற்ற சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வைசாக். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானதோடு யூட்யூப் மற்றும் மற்ற இசைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பாடல்களை எழுதி வரும் வைசாக், அடுத்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு புதிய பாடலில் பணியாற்றி இருக்கிறார். இப்பாடல் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

கடந்த ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் படத்திலும் வைசாக் பாடல் எழுதியிருக்கிறார். மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏ ஆர் கே சரவண் இயக்கத்தில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி வெளிவந்து தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் வீரன் திரைப்படத்தில் பப்பர மிட்டா என்ற பாடலை வைசாக் எழுதி இருக்கிறார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஃபீல் குட் திரைப்படமான டாடா திரைப்படத்தில் நம்ம தமிழ் ஃபோக் என்ற பாடலை எழுதிய வைசாக் அடுத்ததாக விரைவில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு கூட்டணியில் ரிலீஸாக இருக்கும் காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக் படத்திலும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது சுயாதீன இசை கலைஞராக தன்னுடைய மியூசிக் வீடியோக்களை வெளியிட்டு வரும் வைசாக், “காக்கா கத” மற்றும் “எதுவும் கிடைக்கலன்னா” உள்ளிட்ட பாடல்களை கொடுத்திருக்கிறார். இதில் எதுவும் கிடைக்கலன்னா பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்து நடனமாடி அசத்த Youtube மற்றும் பிக் பாஸ் புகழ் ஜி.பி.முத்து நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வைசாக் வெளியிட இருக்கும் மியூசிக் வீடியோக்களுக்காகவும் பாடலாசிரியராக எழுத இருக்கும் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாடலாசிரியர் வைசாக்கின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. பாடலாசிரியர் வைசாக் - ஜுஹரியா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இது குறித்து தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு “அனு தினமும் உனை நினைத்து… உன் நிழலை நான் அணைத்து… பல தடைகள் அதை கடந்து… என்னவளே உனை அடைவேன்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். பாடலாசிரியர் வைசாக்கின் திருமணத்திற்கு தமிழ் திரை உலகைச் சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமமும் பாடலாசிரியர் வைசாக்கின் திருமணத்திற்கு தனது மனம்மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. பாடலாசிரியர் வைசாக் வெளியிட்ட அவரது திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரெண்டிங் இதோ…