தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக முன்னணி நடிகராய் வலம் வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே முன்னுதாரமாய் திகழும் கமல் ஹாசனின் முந்தைய படங்கள் பெரிதாக எடுபடவில்லை. பின் அரசியல் ஒருபுறம் என்று இருக்க மீண்டும் தமிழ் சினிமாவில் அதிரடியாய் நுழைந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் இளம் இயக்குனராகவும் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் கூட்டணி அமைத்து ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. திரைப்படம் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் அடிக்க கமல் ஹாசன் மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி போட்டியில் களமிறங்கினார். விக்ரம் வெற்றிக்கு பின் கமல் ஹாசன் அவர்களின் மார்கெட் மதிப்பும் அதிகரிக்க தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடனும் இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளார். அதன்படி தற்போது கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் அவர்களுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் பின் தொடர்ந்து மணி ரத்னம் அவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். அதே நேரத்தில் கமல் ஹாசன் பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டும் வருகிறார். அதன்படி அவரது இளம் இயக்குனர் வரிசையில் இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் வரிசையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சட்ட மேதை “அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்ட மாதம் சார்பாக திரைப்பட திரையிடல் விழாவை தொடங்கி வைத்து பத்திரிக்கையாளரை சந்தித்த பா ரஞ்சித் அவர்களிடம் அவர் தற்போது சியான் விக்ரம் நடிப்பில் இயக்கி வரும் தங்கலான் படம் குறித்து கேட்கையில் அவர்,

“தங்கலான் படம் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டது. குறிப்பாக கேஜிஎப் ல் பெரிய பகுதியை 55 நாட்களாக படமாக்கி முடித்துள்ளோம். இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கு.. வரும் மே மாதம் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று நினைக்கின்றேன். ரொம்ப சுவாரசியமான படமாகவும், மக்களுக்கு பிடித்த திரைப்படமாகவும் இருக்கும். பெரிய உழைப்பை படத்தில் கொடுத்திருக்கிறோம். படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தது. அதை ஏற்ற படம் செய்து கொண்டிருக்கிறோம். மக்களும் அதிகம் உறுதுணையா இருந்திருக்காங்க.. நிச்சயமா மக்களுக்கு பிடித்த திரைப்படமா இருக்கும்னு நான் நம்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்று நினைக்கிறேன்.‌ ஏனென்றால் படத்தில் VFX காட்சிகள் நிறைய உள்ளது. அதற்கு நேரம் தேவைப்படும்.." என்றார்.

மேலும் அதை தொடர்ந்து கமல் ஹாசன் அவர்களுடனான கூட்டணி எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித், "அதற்கான வேலைகள் போய் கொண்டிருக்கிறது. அந்த படத்திற்கான கதை எழுதி கொண்டு வருகிறேன். தங்கலான் திரைப்படம் முடிந்த பின்பு தான் அது தெரிய வரும். கதை எழுதி வருகிறேன் அதற்கே கொஞ்சம் நேரம் எடுக்கும்." என்று குறிப்பிட்டார். தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.