அடுத்தடுத்து அட்டகாசமான முன்னெடுப்புகளை எடுத்து வரும் தளபதி விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் தினத்தன்று புதிய முன்னெடுப்பு ஒன்றை செயல்படுத்த அறிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக தனது ரசிகர்களால் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சமூக நல முன்னெடுப்புகளையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வரும் தளபதி விஜய், நிஜத்திலும் ஹீரோவாக மக்களின் மனதை வென்று வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில் ரத்த தானத்தை முன்னெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டு வந்த செயலியும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றதோடு பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது. முன்னதாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவசமாக உணவளித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சமீபத்தில் உலக பட்டினி தனமான ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவசமாக உணவு அளித்து மக்களின் பசியை போக்கினர்.

தொடர்ந்து இதுபோன்று பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருக்கும் தளபதி விஜய் அதற்காக தனது ரசிகர்களை முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டியுள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படியே 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களது பெற்றோர்களோடு நேரில் சந்தித்த தளபதி விஜய் மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகையை வழங்கினார். இதனை அடுத்து கடந்த சில தினங்களாக இலவச பயிலகங்களை மாவட்டம் தோறும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் அவர்கள் ஆரம்பிக்க இருப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த நிலையில், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு பனையூரில் தனது அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை தளபதி விஜய் நேரில் சந்தித்தார்.

இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்விக்கான முக்கிய முன்னெடுப்புகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் செயல்படுத்த தளபதி விஜய் உத்தரவிட்டு இருக்கிறார். இதுகுறித்து அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்

"தளபதி" அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.”

என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த செயல்பாடுக்கு தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் அந்த அறிக்கை இதோ…