தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் கேரளா நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தை தற்போது நடத்தியுள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும், இந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தை நிறைவு செய்திருக்கிறார் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வீடியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இதனை தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே தனது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் வாயிலாக தொடர்ந்து பல நற்பணிகளை தளபதி விஜய் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில் ரத்த தானத்தை முன்னெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டு வந்த செயலியும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றதோடு பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது. முன்னதாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவசமாக உணவளித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சமீபத்தில் உலக பட்டினி தனமான ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவசமாக உணவு அளித்து மக்களின் பசியை போக்கினர்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்ட தளபதி விஜய், மக்கள் இயக்கத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களது பெற்றோர்களோடு நேரில் சந்தித்து மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகையை வழங்கினார். இதனை அடுத்து கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்விக்கான முக்கிய முன்னெடுப்பாக 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகங்களை தொடங்கி இருக்கின்றனர். தளபதி விஜயின் மக்கள் இயக்கத்தினரின் என்ற செயல்பாடும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் விஜய் மக்கள் இயக்கத்தினரின் ஆலோசனை கூட்டம் தற்போது பனையூரில் நடைபெற்றது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய #கேரளா நிர்வாகிகளுக்கு #கேடயம் வழங்கப்பட்டது.! அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.!” என தெரிவித்து ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கேரளா நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் அந்த புகைப்படங்கள் & பதிவு இதோ…