மாற்றுக் கட்சியின் கூட்டத்தில் டொடியுடன் கலந்து கொண்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதாக பரவும் செய்திகளுக்கு தளபதி விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்கள் மன்றங்களாக விடாமல் தொடர்ச்சியாக தனது ரசிகர்களால் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சமூக நல முன்னெடுப்புகளையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வரும் தளபதி விஜய், நிஜத்திலும் ஹீரோவாக மக்களின் மனதை வென்று வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில் ரத்த தானத்தை முன்னெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டு வந்த செயலியும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றதோடு பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

முன்னதாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவசமாக உணவளித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சமீபத்தில் உலக பட்டினி தனமான ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவசமாக உணவு அளித்து மக்களின் பசியை போக்கினர். தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படியே 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களது பெற்றோர்களோடு நேரில் சந்தித்த தளபதி விஜய் மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகையை வழங்கினார். இதனை அடுத்து கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி கல்விக்கான முக்கிய முன்னெடுப்பாக 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகங்களை தொடங்கி இருக்கின்றனர். தளபதி விஜயின் மக்கள் இயக்கத்தினரின் என்ற செயல்பாடும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதனிடையே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் நடைப்பயணத்தில் மதுரையில், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை தாங்கி சில பேர் கலந்து கொண்டனர். இதனால் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பாஜக கட்சிக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வர ஆரம்பித்தன. இந்த நிலையில் தளபதி விஜய் தரப்பிலிருந்து தற்போது இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அந்த பதிவு இதோ…