கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாக ஜொலிக்கும் நடிகை திரிஷா கடந்த மே 4ம் தேதி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தில் கொண்டவை கதாபாத்திரத்தில் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து தி ரோடு, கர்ஜனை, சதுரங்க வேட்டை மற்றும் ராம் பார்ட் 1 (மலையாளம்) உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. மேலும் முதல் முறையாக திரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பிருந்தா எனும் வெப் சீரிஸ் விரைவில் SONY LIV தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே தற்போது தளபதி விஜயின் திரை பயணத்தில் 67-வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களின் வரிசையில் 5வது முறையாக கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் திரிஷா இணைந்து லியோ படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த லியோ படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றும், லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரம்மாண்டமான பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2வது கட்டமாக பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் காஷ்மீரில் தொடங்கப்பட்டு மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை திரிஷா தன் பகுதி படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். இதற்காக படப்பிடிப்பிற்கு வந்த திரிஷாவுக்கு லியோ படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். மே 4ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய திரிஷாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தற்போது செட்டுக்கு வந்து திரிஷாவிற்கு லியோ படக்குழு பிரத்யேகமான கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்து லியோ படப்பிடிப்பில் படக் குழு தயார் செய்த பிரத்தியேக கேக்கின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்ட நடிகை திரிஷா, “நன்றி டீம் #லியோ” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படம் இதோ…