மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் ஆக்சன் திரைப்படமான லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து சமீப காலமாக தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பலவிதமான செய்திகள் பரவி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்ஜெயன் அவர்கள் இது குறித்து தரமான காரணத்தோடு விளக்கம் அளித்து இருக்கிறார். நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களிடம், “லியோ இசை வெளியீட்டுக்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன என கேள்விப்படுகிறோம் இசை வெளியீடு மதுரையில் இருக்கும் என நீங்களும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தீர்கள்? எனக் கேட்டபோது,

“ஆமாம் நிறைய பேர் வெளிநாடுகளையும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கு உடன்பாடு இல்லை வெளிநாட்டில் இசை வெளியீடு செய்வார்கள் என்பதில், ஏனென்றால் விஜய் சாரின் அடுத்த கட்டம் வேறு மாதிரி இருக்க போகிறது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் இருக்கிறார். லியோ திரைப்படத்தை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால் நிறைய பேர் சொல்கிறார்கள் வெளிநாடுகளில் இசை வெளியீடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று, என்னைப் பொறுத்தவரையில் அவருடைய கண்ணோட்டத்தில் இது எந்த விதத்திலும் லாபகரமானதாக இருக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு துபாயிலோ அல்லது மலேசியாவிலிருந்து இசை வெளியீட்டு விழா நடத்துவதால் என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது அந்த மக்கள் எல்லாம் சேர்ந்து இவருக்கு ஓட்டு போட போவதில்லை. அவருடைய எண்ணமெல்லாம் என்னவாக இருக்கும் என்றால் ஒவ்வொரு சந்திப்பும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரும்போது அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும் ஒரு ஸ்பீச் கொடுக்க வேண்டும் அவ்வளவு தூரம் மெனக்கிட வேண்டி இருந்தால் அது ஏதோ ஒரு வகையில் அவருக்கு லாபகரமானதாக இருக்க வேண்டும். அப்படி லாபகரமானதாக இருக்க வேண்டும் என்றால் அது தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டும் படத்திற்கு மட்டுமல்ல அவருக்கும் அது தான் லாபம் அதை மதுரை அல்லது திருச்சி என பெரிய நகரத்தில் ஒரு 50 ஆயிரம் பேரை அழைத்தார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் வருவார்கள். அப்படி அந்த ஒரு லட்சம் பேர் முன்னால் அவர் பேசுவது எவ்வளவு பெரிய வைரல் ஆகும். அந்த ஒரு லட்சம் பேரும் அவரை கொண்டாடுவார்கள், “தலைவர் வந்துவிட்டார் தளபதி சொல்லிவிட்டார் நாம் தயாராகி விடுவோம்” இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கிறது தேர்தல் வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பற்றி ஒரு தகவல் கொடுத்தார் என்றால் அது அவர்களுக்கு இன்னும் ஒரு ஐடியாவாக இருக்கும். எனக்கு தெரிந்தவரையில் அது தமிழ்நாடு தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் பண்ண முடியாது சென்னையில் நீங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடியாது மதுரை, கோயம்புத்தூர், திருச்சி இது மாதிரி பகுதிகளில் தான், அதிலும் குறிப்பாக மதுரையும் திருச்சியும் அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்தை கொண்டு வந்த இடங்கள் அதனால் இதில் ஒரு நகரத்தில் இருக்கும் என்பது தான் என்னுடைய கணிப்பு.” என பதில் அளித்துள்ளார். அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.