தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தமிழ்நாட்டில் நடந்த முடிந்த 10 - 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி ஊக்கத்தொகை வழங்க இருக்கும் நிலையில் அதற்கான அடையாள அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது தனது திரைப்பயணத்தில் 67வது திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தில் ரிலீசுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் என்பதைத் தாண்டி மனிதநேயம் கொண்ட நல்ல ஒரு மனிதராக தனது ரசிகர் மன்றங்களை வெறும் நற்பணி மன்றங்களாக மட்டுமல்லாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தளபதி விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில் ரத்த தானத்தை முன்னெடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டு வந்த செயலியும் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றதோடு பல்வேறு பகுதிகளில் ரத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது. முன்னதாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இலவசமாக உணவளித்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சமீபத்தில் உலக பட்டினி தனமான ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இலவசமாக உணவு அளித்து மக்களின் பசியை போக்கினர். தொடர்ந்து இதுபோன்று பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருக்கும் தளபதி விஜய் அதற்காக தனது ரசிகர்களை முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேண்டியுள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டிருப்பதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதாவது 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அவர்களது பெற்றோர்களோடு நேரில் சந்திக்கும் தளபதி விஜய் மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகையை வழங்க இருக்கிறார். வருகிற ஜூன் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் நீலாங்கரையில் அமைந்திருக்கும் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் முன்னிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் நேரில் ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார். இந்த நிகழ்விற்கு “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா” என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. முன்னதாக இந்த நிகழ்வில் ஊக்கத்தொகை பெற இருக்கும் மாணவ மாணவிகளுக்கான அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டு இருக்கின்றன.