பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலினி. அந்த தொடரின் மூலம் தமிழ் மக்களின் அபிப்ராயத்தை பெற்ற இவர் இன்னும் சில தொடர்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் தொலைகாட்சியினரால் நடத்தப்பட்ட ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி ஷோவில் தனது மகளுடன் கலந்து கொண்டார்.

சின்னத்திரை பிரபலமாக தனக்கென தனி ரசிகர்களையும் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காலமாக கணவர் ரியாஸ் அடித்து துன்புறுத்துவதாகவும் மனிதாபிமானம் அற்ற செயல்களில் இறங்குவதாகவும் முன்னதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். பின் தன் கணவரிடமிருந்து தனக்கு விவகாரத்து வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரியாஸ் அவரிடம் இருந்து நடிகை ஷாலினிக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக தனது விவாகரத்திற்காக தனி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் நடிகை ஷாலினி.

இது தொடர்பாக சில புகைப்படங்களை இனையத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி.. அதில் ஒரு புகைப்படத்தில் தனது திருமணத்தன்று எடுத்து கொண்ட புகைப்படத்தை காலில் போட்டு மிதிப்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் திருமண புகைப்படத்தை கிழிப்பது போலவும் மேலும் மற்றொரு புகைப்படத்தில் “எனக்கு 99 பிரச்சனைகள் உள்ளது. அதில் கணவர் கிடையாது” என்ற வாசகத்தை ஏந்திய படி மறுகையில் வைன் பானத்தை ஏந்திய படி புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன்

குரலற்றவர்களாக தங்களை உணரும் விவகாரத்து பெற்ற பெண்களுக்கான செய்தி இது..ஒரு மோசமான திருமண வாழ்வை விட்டுவிடுவது பரவாயில்லை.. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க தகுதியானவர்கள்.. ஒரு போதும் உங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்கள் வாழ்வை நீங்கள் கட்டமைத்து அதற்கான மாற்றங்களை செய்து தயாராகுங்கள்.. விவகாரத்து ஒன்றும் தோல்வியல்ல.. உங்கள் வாழ்வில் தேவையான நேர்மறை மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை அது.. திருமணத்தை விட்டு வெளிவருவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இந்த போட்டோ ஷூட் சமர்ப்பிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்

இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் சிலர் இந்த நிகழ்வை விவகாரத்தை தைரியமாக பெண்கள் பொதுவெளியில் சொல்வது வரவேற்க கூடியது என்றும் சிலர் தனிப்பட்ட நிகழ்வை வன்மங்களுடன் இப்படி போட்டோ ஷூட் நடத்துவது அபத்தமானது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.