தெலுங்கானாவில் இளைஞரை சிதையில் தள்ளி சினிமா பாணியில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஷமீர்பேட் அருகில் உள்ள அதரசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், 45 வயதான கயாரா லட்சுமி. இவர், கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி திடீரென்று அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அடுத்த நாள் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஆட்டோ ஓட்டுநர் போயினி ஆஞ்சநேயலுவும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

அப்போது, லட்சுமியின் உறவினர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் போயினி ஆஞ்சநேயலு வைத்த செய்வினையால் தான், லட்சுமி உயிரிழந்துள்ளதாகக் கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சிமியின் மற்ற உறவினர்கள் போயினி ஆஞ்சநேயலுவை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

மேலும், லட்சுமி எரிந்துகொண்டிருந்த சிதையில், அவரது உறவினர்கள் போயினி ஆஞ்சநேயலுவையும் தூக்கி வீசியுள்ளனர். இதில், அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போயினி ஆஞ்சநேயலுவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.